Author: Sudha Sundaram 0
 66 views

Honouring- Kalaignar

ஒரு சில உண்மைகளை அந்த மேடையில் படார் படார் என போட்டு உடைத்தார் நடிகர் சிவகுமார்.


அது கதாசிரியர் கலைஞானம் அவர்களுக்கான பாராட்டு விழா.


2019 ல் நடந்தது.


சிவகுமார் சொன்ன விஷயத்தைக் கேட்டு விழாவுக்கு வந்திருந்த அமைச்சர்கள் அதிர்ந்து போனார்கள். வி.ஐ.பி.க்கள் வியந்து போனார்கள். அரங்கில் கூடி இருந்த பொதுமக்கள் அசையாதிருந்தார்கள்.


மேடையில் இருந்த ரஜினிகாந்த் கூட அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தார்.


நம்பக் கூடிய விஷயமா சிவகுமார் சொன்னது ?


ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில் சம்பந்தப்பட்ட கலைஞானமும் அதே மேடையில்தான் அமர்ந்திருந்தார். சிவகுமார் சொன்னதைக் கேட்ட பின்னரும் அமைதியாகவே அவர் இருந்தார்.


சிவகுமார் சொன்ன விஷயம் இதுதான்.


பல ஆண்டுகளாக திரை உலகில் இருக்கும் தயாரிப்பாளர் கலைஞானம் இன்னமும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறாராம்.


ரஜினியை முதன்முதலாக


கதாநாயகனாக்கி 'பைரவி' படத்தை எடுத்தவர். பல படங்களின் கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், தயாரிப்பாளர். இவ்வளவு இருந்தும் சொந்த வீடு வாங்க முடியவில்லையாம். காரணம் பணத்தை விட தன்மானத்துக்கு அதிக முக்கியத்துவம் தருபவர் கலைஞானம்.


அதனால்தான் சினிமா உலகில் தனக்கு மற்றவர்கள் மூலம் வர வேண்டிய பணத்தை வற்புறுத்தி வாங்காமல் விட்டு விட்டு, இப்படி வறட்சியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


ரஜினி அதே மேடையில் தன் அருகே அமர்ந்திருந்த கலைஞானத்தை மெல்லத் திரும்பிப் பார்த்தார்.


பல ஆண்டுகளுக்கு முன் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் அவர்கள் இருவரும் சந்தித்தபோது பேசிக் கொண்டது இப்போது ரஜினியின் நினைவுக்கு வந்தது.


அதை கலைஞானமே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதோ, கலைஞானம் அவர்களின் வார்த்தைகள்:


“ரஜினி சூப்பர் ஸ்டாராக உயர்ந்த நேரத்தில் ஒருநாள். ஏவி.எம். ஸ்டூடியோவில் எதிரும் புதிருமாக சந்தித்துக் கொண்டோம்.


அன்புடன் என்னை நலம் விசாரித்தவர் அடுத்து என்னிடம் கேட்ட கேள்விதான் முக்கியமானது.


"நீங்கள் எப்போதும் சந்தோஷமாக காணப்படுகிறீர்களே,


அது எப்படி?'' என்று கேட்டார்.


அவருக்கு நான் இப்படி பதில் சொன்னேன்: "ரெயில் பெட்டிகளில் ஒரு வாசகம் எழுதியிருப்பதை நீங்களும் படித்திருப்பீர்கள். `லக்கேஜை எவ்வளவு குறைத்துக் கொள்கிறீர்களோ, அவ்வளவு சுகமாக இருக்கும் உங்கள் பயணம்'' என்ற அந்த வாசகம் என் விஷயத்திலும் பொருந்தும்.


எல்லாப் பிரச்சினைகளையும் நம் தலைமேல் தூக்கி சுமக்காமல் முடிந்த மட்டும் குறைத்துக் கொண்டால் நாம் சந்தோஷமாக வாழமுடியும்,'' என்றேன்.


இந்தப் பதிலுக்கு ரஜினி அமைதியாக இருந்தார். சிந்திக்கிறார் என்பதை உணர முடிந்தது.”


ஆம். அப்போது மட்டும் அல்ல. இப்போதும் இந்த விழா மேடையிலும் ரஜினி சிந்தித்தார்.


ஏனெனில் ஏகப்பட்ட லக்கேஜ்களை அன்று முதல் இன்று வரை சுமந்து கொண்டிருப்பவர் ரஜினி.


ஊருக்குத்தான் அவர் சூப்பர் ஸ்டார். உள்ளத்துக்குள் ஆயிரம் சொல்ல முடியாத சுமைகள்.


அப்படி ரஜினி தலையில் இருந்த ஏதோ ஒரு சுமைதான் அவர் கண்ணை மறைத்திருக்க வேண்டும். அதனால்தான் கலைஞானத்தின் நிலையை இவ்வளவு காலம் கண்டு கொள்ளாமல் விட்டிருக்க வேண்டும்.


ரஜினி இப்போது நிமிர்ந்து அமர்ந்தார். தன் இருக்கையை விட்டு எழுந்தார். அந்த மேடையிலேயே அப்போதே அறிவித்தார், கலைஞானம் அவர்களுக்கு, தானே தன் பணத்திலேயே ஒரு சொந்த வீடு வாங்கி கொடுப்பதாக.


சொன்ன சில நாட்களிலேயே சொன்னபடி சொந்த வீடு வாங்கி கொடுத்து விட்டார் ரஜினிகாந்த்.


சென்னை விருகம்பாக்கத்தில் 1320 சதுர அடியில் மூன்று படுக்கை அறை வசதிகள் கொண்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு அது.


இந்த நல்லதொரு விஷயத்தை செய்ததற்காக ரஜினியைப் பாராட்டும் அதே வேளையில் இன்னொருவரையும் கூட இங்கே பாராட்டியாக வேண்டும்.


நடிகர் சிவகுமார்.


அவர் மட்டும் அன்று அந்த விழா மேடையில் உண்மைகளைப் போட்டு உடைத்திருக்காவிட்டால் இந்த நல்ல காரியம் நிச்சயம் நடந்திருக்காது.


கலைஞானம் அவர்களின் வாழ்க்கையும், அந்த மேடையில் அன்று நடைபெற்ற இந்த சம்பவமும் ஒரு உண்மையை நமக்கு சொல்லித் தருகிறது.


சத்தியம், நேர்மை, தர்மம்.


இவை அனைத்தும் என்றென்றும் இந்த பூமியில் நிலைத்திருக்கும்.


நீங்கள் நினைத்திராத நேரத்தில்


நிச்சயம் கை கொடுக்கும்.


"சத்தியத்தை நீங்கள்


காத்திருந்தால்


சத்தியம் உங்களை காத்திருக்கும்."


இது நிச்சய உண்மை.


நிரந்தர உண்மை.